Tuesday, March 20, 2012

இறைவனை அடைய ஒன்பது வழிகள் - பகுதி 2



4. பாதஸேவனம் - திருவடி தொழல்

நான்காவது நிலை. திருவடி தொழல். 
இனியவை நாற்பது என்பது பதினெண் 
கீழ்கணக்கில் உள்ள ஒரு நூல். 
அதில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் 
இறைவனுடைய திருவடியைத் தொழுவது 
ஒரு இனிமையான செயல் என்று சொல்கிறது.

கண் மூன்ற உடையான் தாள் 
சேர்தல் கடிது இனிதே
தொல் மான் துழாய் மாலை யாளைத் 
தொழல் இனிதே
முத்துறப் பேணிமுகம் நான்கு 
உடையானைச் சென்று அமர்ந்து 
ஏத்தல் இனிது.


தாள் - திருவடி தொழல் - வணங்குதல்.

மூன்று கண்களுடைய சிவபெருமானது 
திருவடிகளை அடைதல் இனிது. 
பழமையான திருத்துழாய் மாலையை 
அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. 
நான்கு முகங்களை உடைய பிரம்மன் முன் 
அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது. 
கடவுளின் திருவடிகளைத் தஞ்சமடைவதே 
மோட்சத்திற்குச் சிறந்த சாதனம் என்று 
நினைத்துச் செயல்பட்ட மகான்கள் 
எத்தனையோ பேர்.

அவர்களில் மிகச் சிறந்த உதாரண புருஷர் - 
ஆஞ்சநேயர் - அனுமான். 
ராமபிரானது பாதமே கதியெனப் பற்றி 
நின்று நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக 
இருப்பவர்.

பரதன், அனுமாருக்கு ஒன்றும் இளைத்தவரில்லை. 
ராமருடை பாதுகைகளை வைத்து 
பக்தி பண்ணினவன்.

திருவடி சரணம்” - ஒரு சுலபமான வழி.

5. அர்ச்சனம் - பூசித்தல்

ஐந்தாவது நிலை - பூசித்தல் - 
அர்ச்சனம் எனப்படும்.

எத்தனையோ மகான்கள், இறைவனை 
எப்படிப் பூசிப்பது என்பதை 
விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். 
இதில் சொல்லப்படாத ஒரு வித்தியாசமான 
பூசையைக் கடவுளுக்குச் செய்து 
முக்தி பெற்ற மகான் இருக்கிறார். 
பெரிய தத்துவ ஞானியோ-, பண்டிதரோ 
அவர் இல்லை.

சஸ்பென்ஸ் போதும் - அந்த பக்தர்தான் 
கண்ணப்ப நாயனார் என்று அழைக்கப்படும் 
ஒரு படிக்காத வேடுவர். 
கண்ணப்பர் பூசையைப் பற்றித் தெரியாதவர் 
இல்லை என்று நினைக்கிறேன்.
கடவுள் கீதையில் சொன்னபடி 
பக்தியோடு எதைக் கொடுத்தாலும் 
அதைக் கடவுள் முழுமனதோடு 
ஏற்றுக்கொள்வான் என்பதற்குக் 
கண்ணப்பர் பூசை ஒரு எடுத்துக்காட்டு.
சாக்கியர் என்ற மகான் கற்களை 
மலர்களாக மதித்து, இறைவனை அடித்துப் 
பூசித்து அருட்பேறு பெற்றார். 
குரங்கு ஒன்று வில்வ இலைகொண்டு 
இறைவனைப் பூசித்து மோட்சம் 
பெற்ற கதை உண்டு.

ஆக, ஆண்டவனைப் பூசிப்பது 
ஒரு அழுத்தந்திருத்தமான பழுத்த 
பக்தி நிலையாகும்.

6. வந்தனம் - வணங்குதல்

ஆறாவது நிலை வணங்குவது என்ற நிலை. 
தலையே, நீ வணங்காய்என்று பாடினார் 
வாகீசப் பெருமான். 
அபிராமிபட்டர், அம்பிகையின் அருள் 
பெற்றவர். அவர் பாடுகிறார்
 வந்திப்ப பவர் உன்னை
  வானவர் தானவர்,
  ஆனவர்கள்

தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் 
இருக்கின்றன. அவற்றில் எந்தக் கோவில்கள்
பாடல் பெற்ற ஸ்தலங்களோ” 
அவற்றுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. 
அது என்ன சிறப்பு, என்று கேட்கலாம். 
சைவ சமய  நாயன்மார்கள் நால்வரும் - 
அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர்
மாணிக்கவாசகர் - பல்வேறு சிவன் 
கோவில்களுக்குச் சென்று அங்கு 
எழுந்தருளியிருக்கும் சிவன், மற்றும் 
அம்பிகையை வணங்கி, அவர்பால் 
உருக்கமான தெய்வீகப் பாடல்களைப் 
பாடியுள்ளார்கள். அந்தப் பாடல்கள் 
அந்தக் கோயில்களுக்கு ஒரு சிறப்பு 
அடையாளம்.

இதே மாதிரி, வைணவ பக்தர்களான 
பன்னிரண்டு ஆழ்வார்களும் 
(உதாரணம் - நம்மாழ்வார், ஆண்டாள்
திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார்
திருமிழிசை ஆழ்வார்) 
வெவ்வேறு வைணவக் கோவில்களுக்குச் 
சென்று வணங்கி அங்குள்ள இறைவன்பால் 
பண் இசைத்துப் பாடியிருக்கிறார்கள்.
எம்பெருமானை வணங்கித் தொழுவது 
ஒரு இனிமையான நிலை.

... பக்தி தொடரும்

2 comments:

திவாண்ணா said...

நல்ல தொண்டு சார்! தொடருங்க!

Guru said...

அருமையான பதிவு. நன்றி