2012ஆம் ஆண்டு பிறந்துவிட்டது.
வழக்கமாக, ஜோஸியர்கள், புது வருஷ பலன்
சொல்லும்போது, மழை, வெள்ளம், பூகம்பம்,
விவசாய வளர்ச்சி, மக்களின் ஷேம லாபங்கள் —
இவற்றைப் பற்றிதான் ஆருடம் சொல்வார்கள்.
ஆனால், 2012ஆம் ஆண்டு சமாச்சாரமே வேறு.
கடந்த நான்கு வருஷங்களாக படித்தவர்கள்,
விஞ்ஞானிகள் என்று வித்தியாசம் இல்லாமல்
எல்லோரும் இந்த உலகம் டிசம்பர் 21, 2012இல்
முடிவுக்கு வந்துவிடும் என்று எழுதி, பேசி,
பயமுறுத்தி வந்திருக்கிறார்கள்.
இதற்கு முக்கிய ஆதாரம்,
‘மாயன்’ காலண்டர் 2012இல் முடிவடைகிறது.
இதற்கு முன்னால் பல தடவை
உலக அழிவைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள்
எழுதியிருக்கிறார்கள்.
உலகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
இந்த ஆருடமும் அதே மாதிரிதான்
என்று நம்பிச் செயல்படுவோம்.
கவிஞர் கண்ணாதாசன் எழுதியபடி
“என்னதான் நடக்கும், நடக்கட்டுமே .......
தலைவன் இருக்கிறான் மயங்காதே”
இதை நினைவுகூர்ந்து தெய்வத்தின் மேல்
பாரத்தைப் போட்டுவிட்டு
நம் பணிகளைத் தொடர்ந்து செய்வோம்.
என் அருமை நண்பர்களுக்கும்
அவர்கள் குடும்பத்தாருக்கும்
என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
“எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும்”
“எல்லோரும் சுகமாக இருக்கட்டும்”
இன்றோடு என்னுடைய ‘Blog’க்கு வயது
108 நாள்கள்.
108 ஒரு விசேஷமான நம்பர்.
8000த்துக்கும் மேலானவர்கள்
இதைப் படிக்கிறார்கள் என்பதை
நினைத்து ரொம்பவே மகிழ்ச்சி.
உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கம்.
எனக்குத் தெரிந்த விஷயங்களை
உங்களிடம் பகிர்ந்துகொள்வதில்
ரொம்ப மனநிறைவு கிடைக்கிறது.
“குப்பையில்” விஷயங்கள் கிடைக்கும்வரை
இந்த “போர்” சேவை தொடரும்.
புத்தாண்டு பிறந்தாலே, புத்தாண்டுத் தீர்மானங்களும்
கூடவே வரும். யாரோ ஒரு பெரியவர் சொன்ன மாதிரி
“New year ressolutions are meant to be broken.”
புத்தாண்டுத் தீர்மானங்களை நிறைவேற்றாமல்
இருப்பதுதான் சரியான வழி.
இங்கே, நானும் உங்களுக்காக
ஒரு புது வருஷத் தீர்மானத்தை
பரிந்துரைக்கிறேன்.
முடிந்தால், முயற்சி செய்யுங்கள்.
இன்றைக்கு மட்டும் - Just for Today
இன்றைக்கு மட்டும்
இந்த நாளை மட்டும்தான் நான் வாழப்போகிறேன்
நேற்றைப் பற்றி கவலைப்பட மாட்டேன்.
நாளையைப் பற்றி யோசனையில் வாழ மாட்டேன்.
என்னுடைய வாழ்நாள் பிரச்சினைகளை
எல்லாம் இன்றே தீர்த்துவிடத்
தீர்மானங்கள் செய்ய மாட்டேன்.
இன்றைக்கு மட்டும்
நான் சந்தோஷமாக இருக்க முயற்சிக்கிறேன்.
என்னை தளரச் செய்யும் எண்ணங்களை
நினைக்க மாட்டேன்.
என் மனதில் கெட்ட எண்ணங்கள் வந்தால்,
அவற்றை விரட்டிவிட்டு அந்த இடத்தில்
பிரகாசமான சூரிய வெளிச்சத்தை நிரப்புவேன்.
இன்றைக்கு மட்டும்
எல்லோருக்கும் பிடித்தவனாக நான் இருக்க
தேவையான எல்லா முயற்சிகளையும்
முழுமனதுடன் செய்வேன்.
எல்லோரிடமும் கருணையுடனும்
மரியாதையுடனும் நடந்து கொள்வேன்.
மற்றவர்களைப் பற்றி தரக்குறைவான
விமர்சனம் செய்ய மாட்டேன்.
என்னுடைய நடை, உடை, பாவனைகளை
மாற்றிக்கொண்டு என் தோற்றத்தில்
நல்ல மாற்றத்தை உண்டு பண்ணுவேன்.
மற்றவர்கள் பேசும்போது குறுக்கே பேச மாட்டேன்.
என்னை மட்டும் திருத்தி உயர்த்திகொள்ள
முயற்சி செய்வேனே தவிர,
மற்றவர்களின் விஷயத்தில்
மூக்கை நுழைக்க மாட்டேன்.
இன்றைக்கு மட்டும்
என்னுடைய உடல் நலம் ஆரோக்கியமாக
இருப்பதற்கான முயற்சிகளை ஆரம்பிப்பேன்.
நான் புகை பிடிப்பவனாக இருந்தால்
அந்தப் பழக்கத்தை விட்டு விடுவேன்.
நான் பருமனானவனாக இருந்தால்
ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு,
சுறுசுறுப்பான வாக்கிங் -
அது என் வீட்டின் மேல் மாடியானாலும் செய்வேன்.
நான் ஒரு Couch Potato என்று பெயர்
உள்ளவனானால் அதை மாற்ற T.V. பார்ப்பதைக்
குறைத்து மூளைக்கு வேலைத் தரும் முயற்சிகளில் —
படிப்பு, தியானம், ஏதாவது புதுப் பாடம்-
தொழில்/ பொழுதுபோக்கு
போன்றவற்றில் ஈடுபடுவேன்.
இன்றைக்கு மட்டும்
யாருக்காவது, ஏதாவது உதவி செய்வேன்.
இன்றைக்கு மட்டும்
எனக்கு எது சரி என்று படுகிற
காரியத்தைச் செய்வதற்கான தைரியத்தை
வரவழைத்துக்கொள்வேன்.
இன்றைக்கு மட்டும்
நான் செய்யும் காரியங்களின்
விளைவுகளுக்கு நானே பொறுப்பேற்பேன்.
வேறு யாரையும் பொறுப்பாக்க மாட்டேன்
இன்றைக்கு மட்டும்
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைத்
தைரியமாகச் சந்திப்பேன்.
என்னால் திருத்த, மாற்ற முடியும்
என்று நினைக்கிற விஷயங்களை
மாற்ற முயற்சிப்பேன்.
மாற்ற முடியாத விஷயங்களை
ஏற்றுக்கொள்ள மனதைத்
தயார் செய்துகொள்வேன்.
இன்றைக்கு மட்டும்
இந்த அழகான உலகை
ரசிக்க முயற்சிசெய்வேன்.
ரசிக்க முடியவில்லையானாலும்
வெறுக்க மாட்டேன்.
நாம் எல்லோரும்
அமைதியையும் சந்தோஷத்தையும்
இந்த புத்தாண்டில் அடைவோமாக.
மறுபடியும் உங்கள் எல்லோருக்கும்,
என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கொசுறு (வாய் விட்டுச் சிரிக்க)
“ஜீ பூம் பா” - ஜோக்ஸ்
ஒரு சோம்பேறியான அரசாங்க ஊழியர்,
தன்னுடைய அலுவலகத்தில்
உட்கார்ந்துகொண்டிருந்தார்.
ரொம்ப ‘போர்’ அடித்தது.
இதுவரை திறக்காத ஒரு பழைய
அலமாரியைத் திறந்து,
உள்ளே என்ன இருக்கிறது என்று
பார்க்கலாம் என்று திறந்தார்.
பழைய பைல்களுக்கு நடுவில்
ஒரு விளக்குக் கிடைத்தது.
அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டுபோய்,
நன்றாகத் தேய்த்தார்.
அதிலிருந்து ஒரு பூதம் வெளிவந்து
“ஜீ பூம் பா, மாஸ்டர், நான் உங்கள் அடிமை.
உங்களுக்கு மூன்று ஆசைகளை
நிறைவேற்றி வைக்கிறேன்”
என்று சொன்னது.
ஊழியருக்கு ஒரே ஆச்சரியம்.
என்ன சொல்வது என்று தெரியாமல்,
“எனக்கு இப்பொழுது பெப்சி வேண்டும்” என்றார்.
உடனே பெப்சி வந்தது.
இவரும் தாகசாந்தி செய்துகொண்டார்.
இரண்டாவது ஆசையாக, அவர் சொன்னார்
“நான் இப்பொழுது ஒரு அழகான தீவில்
இருக்க வேண்டும். என்னைச் சுற்றி
உலக அழகிகள் நின்று, ஜகதலப்பிரதாபனுக்குச்
செய்த மாதிரி சேவை செய்ய வேண்டும்” என்று.
அவர் சொன்ன மாத்திரத்தில்,
ஒரு அழகான தீவில் இருந்தார்.
சுற்றி, பணிவிடை செய்ய
அழகான பெண்கள் நின்று
கொண்டிருந்தார்கள்.
இப்பொழுது, மூன்றாவது ஆசையைச்
சொல்ல வேண்டிய நேரம்.
கொஞ்சம்கூட யோசியாமல்
மிக்க சந்தோஷத்தோடு,
“பூதமே, நான், இனி வாழ்நாள் முழுவதும்
வேலையே செய்யக் கூடாது.
அதுதான் என் விருப்பம்” என்றார்.
கண் இமைக்கும் நேரத்தில் அவர் தன்னுடைய
அரசாங்க அலுவலகத்தில்
தன் இருக்கையில் இருந்தார்.
... கிளறல் தொடரும்
1 comment:
Well said!
Post a Comment