Light bulb ஜோக்ஸ் என்பது 60, 70களில்
பிரபலமான “கடி” ஜோக்ஸ்.
இது கேள்வி-பதில் பாணியில் இருக்கும்.
கேள்வி - ஒரு “Light”பல்பை மாற்ற
ஒருவருக்கு எவ்வளவு நேரமாகும்?
இந்த “ஒருவர்”, ஒரு சமுதாயத்தையோ,
ஒரு இனத்தையோ, ஒரு அரசாங்க
இலாகாவையோ, ஒரு நபரையோ குறிக்கும்.
பதில்-ஒரு “Punch line”ல் கொடுக்கப்படும்.
இதோ, ஒரு உதாரணம்.
தமிழ் நாடு சர்க்கார் அலுவலகம் ஒன்றில்
ஒரு light பல்ப் fuse ஆகிவிட்டது.
இதை மாற்றி, புது பல்ப் போட எவ்வளவு
காலம் ஆகும்?
இது கேள்வி...
பதில்- ஒரே பதில்தான்...
ரொம்ப காலம் ஆகும்.
ஆனால், விளக்கங்கள் பலவிதம்.
அந்த சுவாரசியமான, நம்பத் தகுந்த
விளக்கங்களைப் படியுங்கள்...
1. விளக்கை மாற்ற ஒரு நபரை நியமனம்
செய்ததால் மெழுகுவர்த்தித் தொழிலில்
வேலைவாய்ப்புக் குறைவதைச்
சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றத்தில்
writ பெட்டிஷன் போடப்பட்டிருக்கிறது.
2. பல்ப் fuse ஆனதில் வெளிநாட்டுச்
சதித் திட்டம் உண்டா என்பதை
CBI விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது.
3. சர்க்கார் ஒரு விசாரணை கமிஷன்
அமைக்க முடிவு செய்துள்ளது.
4. பல்பை மாற்றுவதின் மூலம் மக்கள்
பணம் விரயமாகிறது என்று எதிர்க் கட்சியினர்
நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு
செய்துள்ளனர்.
5. வெள்ளைக்காரன் காலத்தில் போடப்பட்ட
Light Act of 1778படி,
சர்க்கார் பொதுப் பணத்தைச் செலவழிக்கும்
முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
முன்அனுமதி வாங்க வேண்டும்.
6. கர்நாடகா அரசு தன் வசமுள்ள
அதிக பல்புகளைத் தர மறுத்துவிட்டது.
7.பல்ப் fuse ஆனதிற்கு இந்து முன்னணியும்
முஸ்லீம்களும் பரஸ்பரம் குற்றம்
சாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
8. ஏப்ரல், மே மாதங்கள் கோசாரப்படி
அசுபமான மாதங்கள் என்று
ஆஸ்தான ஜோசியர் தன் அபிப்பிராயத்தை
T.V. channelகளில் வெளியிட்டுள்ளார்.
9. கடைசி நேரத்தில் பல்ப் supply செய்யும்
நபரின் காண்ட்ராக்ட் ரத்து செய்யப்பட்டது.
இந்த காண்டிராக்டரின் மாமியாரின்,
கொழுந்தியாரின் மாமாவின் பேரனுடைய
கிளாஸ்மேட்டின் நண்பனின் தாத்தாவும்
அவர் சகோதரரும் எதிர்க் கட்சி நடத்திய
பந்தில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட
விளைவு இது.
10.சர்க்கார் ரகசியமாக வைத்திருந்த
பல்ப் டெண்டர் காண்டிராக்டைப்
பத்திரிகைகளுக்கு லீக் செய்த சர்க்கார்
ஊழியரை சஸ்பெண்ட் பண்ணியதை
எதிர்த்து, அரசாங்க ஊழியர்களின் யூனியன்
strike notice அனுப்பியிருக்கிறது.
11. ஆளுங்கட்சித் தலைவருக்கும் எதிர்க்
கட்சித் தலைவருக்கும் நடக்கும் வழக்கமான
“பனிப்போர்” .
எதிர்க் கட்சித் தலைவர், ஒரு அறிக்கையில்
பல்ப் fuse ஆனது ஒரு “பார்ப்பனச் சூழ்ச்சி”
என்று சொல்லியிருக்கிறார்.மேலும்,
"தன்னுடைய ஆட்சியில் ஒரு பல்ப்கூட fuse
ஆனதில்லை,
இன்று ஒரு பல்ப்தான் fuse ஆகியிருக்கிறது.
இன்னும் சில நாட்களில் எல்லாம்
“இருட்டு மயம்” ஆகிவிடும்.
தமிழ் மக்களுக்கு இது ஒரு பாடம்", என்று
சொல்லி ஆளுங்கட்சியை உசுப்பு
ஏற்றுகிறார்.
ஆளுங்கட்சி, இதற்கு பதில் அளித்துள்ளது.
“இது வெளிநாட்டுச் சதித் திட்டமில்லை.
ஒரு குடும்பம் ஒட்டுமொத்தமாகத்
தமிழ்நாட்டு பல்ப்களை வெளிநாட்டுக்கு
விற்றுவிட்டது.
மத்திய சர்க்கார் உடனே நடவடிக்கை
எடுத்து இந்த பல்ப்களை மீட்டுத் தர வேண்டும்.”
என்று மத்திய சர்க்காருக்கு 100 கடிதங்கள்
எழுதியும் பதில் வராததை சுட்டி காட்டி,
முதல்வர் ஒரு நாள் உண்ணாவிரதம்
இருக்க போவதாக அறிவித்திருக்கிறார்.
12. உங்களுக்குத் தோன்றும் விளக்கங்கள்.
... கிளறல் தொடரும்.
No comments:
Post a Comment