Wednesday, March 20, 2013

ஒரு கர்நாடக சங்கீத ரசிகனின் நினைவு அலைகள் -பகுதி 1



இது கர்நாடக சங்கீதத்தைப் 
பற்றிய கட்டுரை இல்லை. 
பொதுவாக, சங்கீதத்தைப் பற்றிக் 
கட்டுரை எழுதுபவர்கள் சங்கீத வித்வான்களாகவோ,சங்கீத சாஸ்திர மேதைகளாகவோ,விமர்சகர்களாகவோ
உயர்ந்த பதவியில் உள்ளவர்களாகவோ
தான் இருப்பார்கள். 
மேலே சொன்ன எந்தப் பிரிவுக்கும் 
நான் சொந்தக்காரன் இல்லை.

நான் வெறும் கர்நாடக சங்கீத ரசிகன் மட்டுமேரசிகன் மட்டும்தான்.
எனக்குத் தெரிந்த சங்கீதமெல்லாம் 
"கேள்வி-ஞானம்". 
தொடர்ந்து 75 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. 
இன்னும் தொடர்கிறது.

நான் உண்மையிலேயே "கொடுத்துவைத்தவன்"
இரண்டு விஷயங்களில்.

ஒன்று, கர்நாடக சங்கீதத்தின் 
பேரில் ஆர்வம் ஏற்பட்டதைப் 
பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். கர்நாடக சங்கீதம் ஒரு "Acquired taste" - அதற்கான ரசனையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - என்பார்கள்.
அதன் முழுப் பரிமாணத்தைக் 
கேட்ககேட்க எனக்குப் பிடித்தமான சுவையாக மாற்றிக்கொண்டேன். இப்பொழுது நினைத்துப் பார்த்தால்
இது மாத்திரம் நடக்கவில்லையானால், எப்பேர்ப்பட்ட ஒரு பொக்கிஷத்தை இழந்திருப்பேன்!

இரண்டாவது, கர்நாடக சங்கீத வித்வான்களின் ரசிகர்கள் 
பெரும்பாலும் தங்களுக்குப் 
பிடித்தமான பாடகர்கள் /பாடகிகள் மீது 
ஒரு வெறித்தனமாக பக்தியை வைத்திருப்பார்கள். 
அரசியலுக்கு அடுத்தபடியாகச் 
சண்டையில் முடிவது இரண்டு 
ரசிகர்கள் விவாதித்துக்கொள்ளும்போது. எனக்கு இந்த வெறித்தனம் வரவில்லை என்பது ஒரு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய கலெக்ஷனில், அநேகமாக பிரபலமான, அதிகம் தெரியாத
பல வித்வான்களின் கச்சேரிகள் இருக்கின்றன.

என்வரை, எந்த சங்கீதம் நம்மை 
மெய்மறந்து "ஆஹா, அற்புதம்" என்று சொல்லத் தோன்றுகிறதோ 
அதைப் பொக்கிஷமாகப் 
பராமரிக்க வேண்டும். 
அந்த அற்புத "flash" ராகத்திலாவது, பாட்டிலாவது, ஸ்வரத்திலாவது 
ஏற்படலாம்.
அந்த "flash"களின் சங்கீத அடிப்படை தெரியாது. ஆனால் அந்த flashகளை இன்றும் நினைவுகூருகிறேன்.

எத்தனை வித்வான்கள்... எத்தனைக் கச்சேரிகள்... எந்தனை இடங்களில்... கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. 
ஆனால், சில குறிப்பிட்ட சம்பவங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் சொல்லப் போகிற எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒரே ஒரு சரடுதான் பொதுவாக இருக்கும். 
அது வித்வான் - ரசிகனின் 
ஒரு அமானுஷ்யமான உறவு. 
சங்கீத உலக ஜாம்பவான்களும் சரி
புதிதாக மேடைக்குப் பாட வரும் 
இளம் பாடகர்களும் சரி
ரசிகர்களுக்காகவே பாடிவந்தார்கள், பாடிவருகிறார்கள்.

ரசிகர்களை எப்படிக் கவரலாம் 
என்பதை ஒரு "டெக்னிக்காகவே" 
கையாண்டு வந்தார்கள். எத்தனைப் பட்டங்கள் கிடைத்தாலும் ரசிகனின் அங்கீகாரத்தைத்தான் பெரிதாக நினைத்தார்கள். 
அவற்றிலிருந்து சில இதோ...

என் கேள்வி-ஞானத்திற்கு 
அஸ்திவாரம் போட்டது 
திருநெல்வேலியில் 
நான் கேட்ட ஹரிகதை, நாகஸ்வர இசை, சில பாடகர்களின் கச்சேரிகள்
சினிமா ஆகியவைதான்.

திருநெல்வேலி, படிப்புக்கு (நிறைய கால்லூரிகள்) அரசியலுக்கு 
(வ.உ.சி, பாரதி, வ.வே.சு.அய்யர்) கோவிலுக்கு (நெல்லையப்பர்-காந்திமதி) பெயர்போனது.

காலாச்சார, சங்கீத திறமைகளுக்குத் தஞ்சாவூருக்கு இணையாகப் 
பேச முடியாது. 
எனக்கு Best of both worlds. 
(பிறந்தது தஞ்சை) 
பெரிய வித்வான்கள் திருநெல்வேலி
வரை வந்து கச்சேரிசெய்யத் தயங்குவார்கள். அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. நெல்லையப்பர் / காந்திமதிக்கு
மதுரை மீனாட்சிக்குக் கிடைத்த 
Brand, Image கிடையாதே
மதுரை வருவார்கள், நேராகத் 
திருச்செந்தூர் சென்றுவிடுவார்கள். இவ்வளவுக்கும் நெல்லை கோவிலும் சரி, தேரும் சரி, மதுரையைவிட
உசத்தி கண்ணா உசத்தி.

நம் கதைக்கு வருவோம்...
நெல்லையில் 2 உற்சவங்கள் நடக்கும். ஒன்றை ருத்ர பாகவதர் என்பவர் நடத்துவார். 
இன்னொன்று ராமநவமி உற்சவம்.
10 நாள்கள் கச்சேரிகள் நடக்கும். 
பெரிய மனதுபண்ணி வருஷாவருஷம் வருகிற பெரிய வித்வான் 
மதுரை மணி அய்யர். அடுத்தவர் 
சாத்தூர் A.G. சுப்ரமணியம் அவர்கள். மற்றவர்கள் லோக்கல். 
அதில் நெல்லை மணி (வயலின்) 
நெல்லை தேவராஜன் (மிருதங்கம்) பிரசித்தம்.
இன்னொரு ஜாம்பவான்
கல்லிடைக்குறிச்சி ராமலிங்க பாகவதர். முதல் அரை மணிநேரம் கேட்கக் கஷ்டமாகவும் கேலியாகவும் இருக்கும். 
அதற்குப் பிறகு அந்தத் தொண்டை
அதை வர்ணிப்பது கஷ்டம். 
இவர் தீக்ஷிதர் பக்தர். தியாகராஜ கீர்த்தனை பாட மாட்டார்.  
Music Academy ரொம்ப வயதுக்குப்
பின் இவரை கெளரவித்தார்கள்.
மதுரை மணி அய்யர்,











7/8 மணி நேரம் குறையாமல் 
பாடுவார். அவருடைய 
ஸ்வர நோட்டிற்காகக் 
காத்திருப்பார்கள். 
இவர் ரசிகர்களை 
எப்படி மதித்திருக்கிறார் 
என்பதற்கு இதோ ஒரு சான்று. 
மதுரை மணி அய்யர் பெரும்பாலும் 
பாடிய பாடல்களையே பாடுவார்.
ஒரு நிருபர் அவரைப் பேட்டி காண சென்றபோது, மணி அய்யரிடம் 
"சார், நீங்கள் ஏன் பாடிய பாடல்களையே திரும்பத்திரும்ப பாடுகிறீர்கள்?" 
என்று கேட்டார்.
மதுரை அய்யர் பதில்: 
"அம்பி, என் கச்சேரிக்கு வரவாள் 
எல்லாம், மதுரை மணிக்கு எத்தனைக் கீர்த்தனைகள் பாடாந்திரம் என்று கேட்பதில்லை, அவர்கள் என் கச்சேரிக்கு வரும் முன் இன்றைக்கு சரஸசாமபாடமாட்டாரா, ‘தாயே யசோதாபாடுவாராநிச்சயம் நோட் பாடுவார் 
என்ற எண்ணத்துடன்தான் வருகிறார்கள். அவர்களுக்கு நான் சில பாடல்களை நன்றாகப் பாடுகிறேன் என்ற மதிப்பு. 
நான் ரசிகனை ஏன் ஏமாற்றவேண்டும்? அவன்தானே என்னை வளர்க்கிறான்?" என்ன பரந்த மனசு!
இந்தச் சில கச்சேரிகளைத் தவிர, கதாகாலஷேபம் நிறைய நடக்கும். 
சுசீந்தரம் ஸ்தாணு பாகவதர் 
(நாகர்கோவில் கணேசன், ஹரிஹரன் தகப்பனார்) 
ராமாயணக் கதையை  9 நாளில் 
நடத்துவார். கதை, சங்கீதம்
ஹாஸ்யம் என்று பல்சுவை நிகழ்ச்சி.
அடுத்ததாக நெல்லையில் 
நான் கேட்டது. நாகஸ்வர இசை. 
இந்தச் சந்தர்ப்பம் மற்ற 
பகுதியினருக்குக் கிடைத்திருக்காது.
நெல்லையப்பர் - காந்திமதி கோவில் உற்சவம் ஆனி மாதம் 10 நாள்கள் 
நடக்கும். கடைசி நாள் பெரிய தேர். 
7ஆம் நாளிலிருந்து பெரிய பெரிய 
நாகஸ்வர மேதைகள் வந்து 
3 இரவுகளிலும் சுவாமி புறப்பாட்டுக்கு வாசிப்பார்கள். வாசிக்காத மேதைகளே இல்லை. இன்னொரு மறக்க முடியாத நிகழ்ச்சி. திருவாவடுதுறை ஆதீனம் நெல்லையில் முகாம் இட்டிருந்தார்கள். ஒருநாள், காலையில் குறுக்குத் துறையிலிருந்து ஆதீனம் 
குளித்துவிட்டுப் பல்லக்கில் வந்துகொண்டிருந்தார்கள். 
முன்னால் நாகஸ்வரம்
நம்பமாட்டீர்கள் தலையில் 
துண்டைப் போட்டுக்கொண்டு 
நடந்து வாசித்துகொண்டிருந்தவர் 
சாக்ஷாத் T.N. ராஜரத்னம் பிள்ளை. ஆஸ்தான வித்வான். 














ஆதீன விஜயத்தின் கடைசி நாள். 
பட்டினப் பிரவேசம். 4 நாகஸ்வர வித்வான்கள்-T.N. ராஜரத்னம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை, கர்க்காய் நடராஜசுந்தரம் பிள்ளை, காறிக்குறிச்சி அருணாச்சலம். 
நாலு வீதி மூலைகளிலும் அவர்கள் 
நின்று வாசிக்க, ரசிகர் கூட்டம் 
நெல்லை ரோடுகளில் தரையில் 
உட்கார்ந்து கேட்டது. 
டிஸ்டிரிக்ட் ஜட்ஜ் அதே தரையில்தான் உட்கார்ந்து கேட்டார். 
இன்னொரு TNR கச்சேரி கல்லிடைக்குறிச்சியில். 
என் நண்பன் கல்யாணத்தில்.
கல்லிடைக்குறிச்சி 18 அக்ரகாஹரங்கள் கொண்டது. யார் வீட்டுக் கல்யாணம் ஆனாலும் 18 தெருக்களிலும் 
மைக் வைப்பார்கள். 
TNR இரவு 9 மணிக்கு ஆரம்பித்தார். 
காலை 5 மணிக்குக் கச்சேரி 
முடியவில்லை. 
எனக்கு 5 1/2க்கு ரயிலைப் பிடிக்க வேண்டும். நெல்லைக்குப் போக 
வேண்டிய கட்டாயம். பரீட்சை.

இந்த ஜம்பவான்களுக்கு நேரம் 
ஒரு கணக்கே இல்லை.

நல்ல கச்சேரிகள் கேட்கும் வாய்ப்பை கல்யாணம் பண்ணுவர்கள் தந்து வந்தார்கள்.கச்சேரிகள் பெரும்பாலும் 

இரவு சாப்பாட்டுக்கு பிறகு தான் நடக்கும்.
அதனால் கேட்க வருபவர்களும் 
சங்கோசம் இல்லாமல் கேட்க 
வருவார்கள்.
நடத்துபவரும் மகிழ்ச்சியுடன்
வரவேற்பார்கள்.
எங்கள் ஊர் ஜட்ஜ்,வெங்கடராமன்
தன் மகள் கல்யாணத்தை 
பாளையங் கோட்டையில் நடத்தினார்.
4 நாள் கல்யாணம்.ஜி.என்.பி,
செம்மங்குடி,அரியக்குடி,ஆலத்துர் 
என்று வித்வான்கள் வந்தார்கள்.
கூடவேTop வயலின் வித்வான்கள்,
மிருதங்க வித்வான்கள்.
டவுனிலிருந்து பஸ்கள் freeஆக
ஏற்பாடு செய்தார்.வாழ்க அவர்.

கடைசியாக,என் கேள்வி-ஞானத்தை வளர்த்தது சினிமா சங்கீதம். 

ராகங்களை இனங்கண்டுகொள்ள 
உதவியது சினிமா பாட்டுக்கள். 
முதல் பாட்டு. அம்பா நீ இரங்காய் (அடாணா) இது நிஜமா (பேகட), பத்தினியே (சஹானா)
சந்திரோதயம் (சங்கராபரணம்)
வதனமே (சிந்துபைரவி) etc etc...
வாழ்க - பாபநாச சிவன் - 
ஜி.ராமநாதன் - MKT / சின்னப்பா / மஹாலிங்கம்.

திருநீலகண்டர்,சிவகவி,மனோன்மணி
சாவித்ரி--இப்படி பல படங்கள்
எனக்கு கர்நாடக சங்கீத அறிவை
வளர்த்திக் கொள்ள உதவியது.
ஒழுங்காக சங்கீதம் படிக்காத 
தற்குறிகளுக்கு இவர்கள்தான் அறிவுஜீவிகள்.

என்னுடைய அடுத்த சங்கீத பாடம் சென்னையில். 
1953இல் சென்னை வந்தேன். 

அலைகள் ஓயவில்லை.....

2 comments:

வழிப்போக்கன் said...

பேஷ், பேஷ்!
ஆரம்பமே படு ஜோர்!
நடத்துங்கள் உங்கள் கச்சேரியை. கேட்க-இல்லை படிக்கத் தயாராக இருக்கிறோம்.
அன்புடன்

வழிப்போக்கன் said...

பேஷ், பேஷ்!
ஆரம்பமே படு ஜோர்!
நடத்துங்கள் உங்கள் கச்சேரியை. கேட்க-இல்லை படிக்கத் தயாராக இருக்கிறோம்.
அன்புடன்