“வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும்
பழுத்த வயதினரை யார் தினசரி
வணங்கிச் சேவை செய்கின்றார்களோ,
அவர்கள் நீண்ட ஆயுள், ஞானம், புகழ், பலம்
என்ற நான்கு விதமான சித்திகளை
அடைவார்கள்.”
சமஸ்கிருதப் பழமொழி.
"ஒரு குழந்தையின் கஷ்டம்,
தாயாருக்குப் புரியும்:
ஒரு யுவனின் கஷ்டம்,
ஒரு யுவதிக்குப் புரியும்:
ஒரு வயோதிகனின் கஷ்டம்,
யாருக்குமே புரியாது.”
- விக்டர் ஹ்யூகோ
1982ஆம் ஆண்டு - ஜூலை:
ஆஸ்த்ரியா நாட்டில்,ஒரு உலக மகாநாடு.
வயோதிகத்தையும் (aging),
வயோதிகர்களையும் (aged) பற்றி
விவாதிக்கும் மேடை.
இந்திய அரசு சார்பில், வாசிக்கப்பட்ட
அறிக்கையிலிருந்து ஒரு பகுதி:
“இந்தியாவைப் பொறுத்தமட்டில்,
வயோதிகம் என்ற பிரச்சினைக்கு
இடமே இல்லை.
அது ஒரு கவலை தரும்
விஷயமே இல்லை.
“வயோதிகர்கள்” என்று ஒரு
தனிப்பட்ட பிரிவினராக
அவர்களைக் கருதி அவர்களுக்காக
பிரத்தியேகமான வழிமுறைகளைக்
கொண்டுவர வேண்டிய
அவசியமே இல்லை.”
மேலும் சொல்கிறது அந்த அறிக்கை: -
“குடும்பமும் சமூகமும்,
வயோதிகர்களை எப்படி நடத்த
வேண்டும் என்பதைக் காலம்காலமாக
எங்கள் மத, கலாச்சார, சமூகக் கோட்பாடுகள்
விரிவாகச் சொல்லிவந்திருக்கின்றன.
வயோதிகர்கள் பிரச்சினையில்
அரசு நேரடியாகக் குறுக்கிடாமல்,
ஒரு ஆதரவான போக்கைத்தான்
(supporting role)
கடைப்பிடித்துவருகிறது.
இதுவரை குழப்பம் ஒன்றும் இல்லாமல்
எல்லாமே சுமுகமாகத்தான்
போய்க் கொண்டிருக்கிறது.”
ஆஹா, என்ன அழகான வர்ணனை!
நாம் இப்பொழுது இருப்பது 2012.
“Non issue” - (பிரச்சினையே இல்லை)
என்று கருதப்பட்ட ஒரு விஷயம்,
கடந்த 30 ஆண்டுகளில் கவலையைத்
தரும் விஷயமாக மாறி, இன்று ஒரு பூதாகரப்
பிரச்சினையாக உருவாகியிருக்கிறது.