Monday, March 04, 2013

பதின்மவயதினரைச் (Teenagers) சமாளிக்கச் சில யோசனைகள்



13 வயதிலிருந்து 19 வயதுவரை உள்ளவர்களை டீன்ஏஜர் 
என்று அழைக்கிறோம். 
குழந்தைப் பருவத்திற்கும் 
வாலிபப் பருவத்திற்கும் இடையில் 
இருக்கும் இந்த ஏழு ஆண்டு பருவம் 
ஒரு இரண்டுங்கெட்டான் பருவம்.
பெற்றோர்கள் எந்த நாட்டில் 
இருந்தாலும் எந்தக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கவலையோடு சந்திக்கும் பருவம். 
தங்கள் குழந்தைகள் எப்படி உருவாகப்போகிறார்கள் என்ற 
ஏக்கம் ஒரு பொதுவான நிலை. பெரும்பான்மையான பெற்றோர்கள் 
இந்த adolesent ageஐ ஒரு எதிர்மறையாகவே சிந்தித்து 
இந்தப் பருவத்தினரை 
angry, argumentative, annoying 
என்று நினைக்கிறார்கள். 
அந்த "A" வரிசையில் ஏன் அவர்களை 
angel ஆகவோ அந்தப் பருவத்தை awesome என்றோ நினைக்கக் கூடாது?
பதின்மவயதினர் பிரச்சினை 
எல்லா நாட்டின் பெற்றோர்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும் 
இதன் முழுத் தாக்கம் இருப்பது மேலைநாடுகளில். குறிப்பாக
அமெரிக்கா போன்ற நாடுகளில்தான். 
மற்ற நாட்டுக் குழந்தைகளைவிட 
(இந்தியா,சீனக் குழந்தைகளைவிட) 
இந்த நாட்டுக் குழந்தைகள் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். எத்தனையோ காரணங்கள்
கல்வி, கலாச்சாரம், பெற்றோரின் அணுகுமுறை என்று. 
என்ன படிப்புப் படிக்க வேண்டும்
யாரிடம் பழக வேண்டும் என்ற பல பிரச்சினைகளைத் தேர்ந்தெடுப்பதில் பரிபூரணசுதந்திரம் உண்டு. 
இவர்களுக்கு எங்கெல்லாம் பெற்றோர்களின் அடைக்கலம் கிடைக்கிறதோ அந்தக் குழந்தைகள் எல்லாம் நல்ல முறையில் 
வளர்கிறார்கள். எங்கெல்லாம் 
குடும்பப் பிரச்சினைகள் இருக்கிறதோ, அந்தச் சூழ்நிலையில் வாழும் 
குழந்தைகளின் எதிர்காலம் 
ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. 
ஆக குடும்பம் என்பது 
ஒரு அளவுகோலாக இருக்கிறது.

அந்த அளவுகோலில், ஆசிய நாட்டுக் குழந்தைகள்-இந்தியா, சீனா உட்பட- அதிர்ஷ்டசாலிகள். பெற்றோர்களின் கண்காணிப்பு அவர்களுடைய 
இளம் பிராயத்திற்கு ஒரு கவசமாக இருக்கிறது. இதைச் சாக்காக வைத்துக்கொண்டு இந்திய, ஆசிய நாடுகளில் டீன்ஏஜ்பிரச்சினை 
கிடையாது என்று முடிவு கட்டுவது 
ஒரு தப்பான நிலை.
நாகரீகம் வெகுவாகப் பரவிவருகிறது. Internet போன்ற மீடியா 
பரவலின்மூலம் மேல்நாட்டு 
நாகரீகங்கள் எல்லா நாட்டினரையும் 
போய்ச் சேர்கின்றன. 
இந்தியா போன்ற நாடுகளிலும் 
குடும்பத்தில் காணப்படும் 
மதிப்பீடுகளில் ஒரு தேக்க நிலை 
ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. 
அதனுடைய விளைவு
குழந்தைகளையும் பாதிக்கிறது. பெரும்பான்மையான இந்தியப் பெற்றோர்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளும் வாசகம்
 "நான் என் அப்பா என்னை நடத்தியதுபோல என் குழந்தைகளை நடத்துவதில்லை. நான் அவர்களுக்கு 
ஒரு நல்ல நண்பன்" என்று. 
கேட்பது நன்றாக இருக்கிறது. 
உண்மை அது இல்லை.
கார் தயாரிக்கும் முன்னோடி 
Henry Fordஐப் பற்றி ஒரு joke. 
நீங்கள் எந்த வர்ண காரை வேண்டுமானாலும் கேட்கலாம்
அது கருப்பாக இருக்கும் வரை. 
அதே மாதிரி, பெரும்பான்மையான பெற்றோர்கள் இன்னும் அந்த "கண்ட்ரோலை" விடத் தயாரான 
நிலையில் இல்லை.
பதின்மவயதினரைத் தங்களுக்குக் 
கிடைத்த "second chance" 
ஆகத்தான் நினைக்கிறார்கள். 
தாங்கள் சாதிக்க முடியாத 
விஷயங்களைத் தங்கள் குழந்தைகள் 
மூலம் சாதிக்க முயற்சிக்கிறார்கள்.
 "நான் IITஇல் சேர முடியவில்லை. 
என் பையனாவது IIT பாஸ் செய்து 
நிறைய சம்பாதிக்க வேண்டும்" என்று நினைக்கும் பெற்றோர்கள்தான் அதிகம். பையனுக்கு IIT பிடிக்குமா என்று 
யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. 
இது யதார்த்தமான நிலை. 
ஏனெனில் 6ஆவது படிக்கும் 
பையனை IIT coachingக்கு 
அனுப்பும் பெற்றோர்கள் 
இருக்கிறார்கள். 
12 வயது பையன் எப்படி 
IIT வேண்டும் / வேண்டாம் 
என்று தீர்மானிப்பான்?
1961 சென்ஸஸ்படியே 6800 
விதமான வேலைகள் நாட்டில் 
இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள். 
அந்த எண்ணிக்கை இப்பொழுது 10,000த்தைத் தாண்டியிருக்கும். 
இன்னும் பெற்றோர்கள் விரும்புவது 
ஒரு சில குறிப்பிட்ட துறைகள். 
ஏதாவது ஒரு பையனோ, பெண்ணோ 
தான் பாடகனாகவோ, பாடகியாகவோநடிகனாகவோ, நடிகையாகவோ ஆக ஆசைப்பட்டால்  கிடைக்கும் பட்டம் "உதவாக்கரை". 
இதனால் பாதிப்பு ஏற்படுத்துவது பதின்மவயதினரைத்தான். 
விளைவு frustration, anger. 
அதை வெளிக்காட்ட எதிர்ப்பு
மற்ற கெட்ட பழக்கங்களில் ஈடுபடல்.
பிரச்சினைகள் இல்லாமல் 
குழந்தைகள் நல்ல குழந்தைகளாக 
வாழ வேண்டுமானால் அதற்கான சூழ்நிலையைப் பெற்றோர்கள்தான் உருவாக்க வேண்டும். எப்பொழுதும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய மந்திரச் சொல் 
"இது என் பையனுக்கும் 
பெண்ணுக்கும் பிடிக்குமா?" என்பது.
இதோ சில யோசனைகள்
1. குழந்தைகள் வளர்கிறார்கள். வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. 
இனம் தெரியாத பயம். 
இந்த "டீன்ஏஜ்" நதியைக் கடக்க அவர்களுக்கு ஒரு பாலம் தேவை. 
அது, ஏன், பெற்றோர்களாகிய 
நீங்களாக இருக்கக் கூடாது
நீங்கள் அவர்களுக்கு நெருக்கமாக (உள்ளத்தாலும்கூட) இருந்தால் 
அது பெரிய உபயோகமாக இருக்கும். அதோடு, நீங்கள் அவர்கள் 
சொல்வதைக் காதுகொடுத்துக் 
கேட்கத் தயாராகுங்கள்.
2. குழந்தைகளை, ‘இரண்டுங்கெட்டான்’ ‘ஒன்றும் தெரியாதவர்கள்என்று நினைப்பதைத் தவிர்த்து 
அவர்களை ஒரு பொருட்டாக 
மதியுங்கள். அவர்களிடம் 
பிரச்சினைகளைப் பற்றி 
மனம்விட்டுப் பேசுங்கள். 
அவர்களுடைய அபிப்பிராயங்களைப் பற்றிக் கேளுங்கள். 
அவர்களுக்குக் கடமைகளைப் 
பற்றியும் கிடைக்கும் வசதிகளையும் 
பற்றிப் பேசுங்கள்.
3. சிறுவயதில் உங்களைக் கேள்வி 
கேட்டு நச்சரித்த குழந்தை 
எங்கே என்று கேட்கத் தோன்றும். 
நீங்கள் வேலையில் இருந்தாலும் "விளையாட வா" என்ற அடம்பிடித்த பையன் (பெண்) எங்கே
எங்கும் போகவில்லை. 
அவர்கள் வளர்கிறார்கள். 
புதுக் கேள்விகளைக் கேட்க 
அவர்களுக்கு அவகாசம் தேவை. 
முதலில் தாங்கள் யார் என்று 
அவர்களைத் தெரிந்து
கொள்ள வேண்டும். 
உலகத்தை அவர்கள் explore 
பண்ண அவகாசம் தேவை. 
உங்கள் அணுகுமுறை 
அவர்களுக்குப் பலம்.
4. அவர்கள் நண்பர்களுடன் 
வெளியே சென்றால் சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள். 
அதைப் பற்றிப் பேசுங்கள். விவாதிக்காதீர்கள்.
5. நீங்கள் ஒரு "Busy body" 
ஆக இருக்கலாம். 
வாரத்தில் 20 நிமிடங்கள் உங்கள் குழந்தைகளுக்காகச் செலவிடுங்கள். எதிர்மறையான comments 
இல்லாமல், குறுக்கிடாமல் 
அவர்கள் பேசுவதைச் செவிசாய்த்துக் கேளுங்கள். 
எப்பொழுதும் நீங்கள் கேட்க 
நினைத்த விஷயங்களை மட்டும் 
அவர்கள் பேச மாட்டார்கள். 
அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
6. உங்களுடைய உணர்வுகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் சிறுவயதில் எப்படி 
வாழ்ந்தீர்கள் என்பதை 
அவர்களுடன் நினைவுகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மனதைத் 
திறந்தீர்களானால் அவர்களும் 
தங்கள் மனதை உங்களுக்காகத் திறப்பார்கள்.
7. குழந்தைகளின் நடவடிக்கைகளில் 
ஆர்வம் காட்டுங்கள். அவற்றைப் பற்றி நிறைய கேள்வி கேளுங்கள். 
அவர்களுடைய பொழுதுபோக்கு, நண்பர்கள், பிடித்தது, பிடிக்காதது 
பற்றிப் பேசுங்கள். இந்த அணுகுமுறை பிடிக்காத விஷயங்களைப் பற்றி 
விவாதிக்க ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கும்.
8. நீங்கள் வளர்ந்த, வளரத் தவறிய வார்ப்பில் குழந்தைகளை 
வளர்க்காதீர்கள். இப்பொழுது வார்ப்பு மாறிவிட்டது. 
நீங்கள் வாழ்ந்த காலம் 
மெதுவாக நகர்ந்தது. 
இப்பொழுது மின்னல் வேகத்தில் 
வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது pressure, tension ஜாஸ்தி. குழந்தைகள் அவர்கள் உலகத்தில் 
வாழ வேண்டுமே தவிர
நீங்கள் வாழ்ந்த உலகத்தில் அல்ல.
9. குழந்தைகளை உங்களுக்குக் 
கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக நினைத்துச் செயல்படாதீர்கள். 
நீங்கள் அடையத் தவறிய 
விஷயங்களை அவர்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முயலாதீர்கள். அவர்களுக்காக நன்றாகத் 
திட்டம்போட்டு வாழ்க்கை எப்படி 
இருக்க வேண்டும் என்று போடுவீர்கள். ஆனால் அதன் உள்ளே, நீங்கள் இருக்க கூடாது. உங்கள் வாழ்க்கையை 
அவர்கள் மூலம் வாழ ஆசைப்படாதீர்கள்.
10. அவர்கள் சக்திக்கு மீறிய 
லட்சியங்களை அவர்கள்மீது திணிக்காதீர்கள். 
அது எப்பொழுதும் சங்கடத்தையும் tensionஐயும்தான் கொடுக்கும். 
அவர்கள் 100 மார்க் வாங்கினாலும் 
சரி, பெயிலானாலும் சரி
அவர்களை முழுவதுமாக நேசியுங்கள். எல்லோரும் rank holders ஆக 
இருக்க முடியாது.

ஒரு சமஸ்கிருத பழமொழி, 
"5 வயதுவரை ஒரு குழந்தையை 
ராஜா மாதிரியும், 14 வயதுவரை வேலைக்காரன் மாதிரியும் 
அதற்கு மேலே அவனை நண்பனாகவும் பார்க்க வேண்டும்" என்று சொல்கிறது. அதன்படி,தோளுக்கு மேலே வளர்ந்த பையனையும் பெண்ணையும் 
நண்பர்களாக நீங்கள் நினைத்து 
வளர்த்தால், அவர்களும் உங்கள் 
அன்பைப் பல மடங்குடன் திருப்பிக் கொடுப்பார்கள்.
இந்த மாதிரி சூழ்நிலையில் வளர்ந்த குடும்பங்களில் டீன்ஏஜ்பிரச்சினை என்பதே இருக்காது.

'டீன்ஏஜ்- பிரச்சினை' பற்றி அநேக
ஆராய்ச்சி கட்டுரைகளும் 
புஸ்தகங்களும் இருக்கின்றன.
அதில் எனக்கு பிடித்த புஸ்தகம்-

Listening to a Teenager-
Ruth Reardon


... கிளறல் தொடரும்.

1 comment:

பாலாஜி said...

அருமையான பதிவு. சந்தோஷத்தையும் சம்பாதிப்பதையும் சமமாக நினைக்க, குழந்தைகளுக்கு காட்டித் (கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை) கொடுத்தாலே போதும் என்று நினைக்கிறேன். அதை அடைய எண்ணற்ற வழிகள் இருக்கின்றன...அவர்களுக்கு பிடித்ததை தேடிக் காணும் திறமை குழந்தைகளுக்கு இருக்கின்றது என்பதை மதிப்பதே முதல் படி.. ....but easier said than done!!!